ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்
ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படை அறிவித்துள்ளது.
முன்னதாக கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பாதையையும் மூடுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஈரானுடன் ஒருங்கிணைந்து மற்றும் சுங்கக் கட்டணம் செலுத்துவதன் மூலம் கப்பல்கள் இந்த நீரிணை வழியாக பயணிக்க முடியும் என்று ஈரான் கடந்த வெள்ளிக்கிழமை (17) தெரிவித்திருந்தது.
இருப்பினும், நேற்று (18) ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தடையை மீறும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்படும் என்று கடற்படை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முற்றுகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் கருதுகிறது.
நேற்று ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் கடலோரப் பகுதிகளில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன. அவற்றில் குறைந்தபட்சம் ஒரு கப்பல் ஈரானிய துப்பாக்கிப் படகுகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

