மலேசியாவில் சாதனை படைத்து நாடு திரும்பிய இலங்கைப் பெண்கள்!

மலேசியாவில் சாதனை படைத்து நாடு திரும்பிய இலங்கைப் பெண்கள்!

மலேசிய அழகுக்கலை போட்டியில் ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப்படைத்த இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் சிறப்பாக செயல்பட்டு ஐந்து பதக்கங்களை வென்றிருந்த நிலையில் அவர்கள் தாய் நாட்டை வந்தடைந்தனர். அப்போது அவர்களை, சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவரான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி  எஸ். சந்துரு பெர்னாண்டோ அவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஏழு அழகுக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இவர்களை இலங்கையின் அழகுக்கலை நிபுணரும், பயிற்சியாளருமான கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சார்பில் போட்டியிட்டவர்களில், யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த சுலக்‌ஷனா சஞ்சீவன் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்று, இரண்டு பதக்கங்களைத் தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.

இதன்போது இரட்டைப் பதக்கங்களை வென்ற சுலக்‌ஷனா சஞ்சீவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சர்வதேச தரம் வாய்ந்த ஒரு அழகுக்கலை போட்டி நிகழ்ச்சியில் 14 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான போட்டியாளர்களுடன் போட்டியிட்டு பதக்கம் வென்றது இலங்கைக்கு ஒரு பெருமை சேர்க்கும் விடயமாகும். குறிப்பாக வட பகுதியில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றது எமக்கு இரட்டை பெருமை மிகு தருணமாகும் மேலும் அடுத்த வருடமும் இப்போட்டியில் கலந்து கொண்டு அதிக அளவு பதக்கங்களை வெல்வதற்கு நாங்கள் உத்வேகமாக உள்ளோம், என்றார்…

அத்துடன் தொடர்ந்து
இப்போட்டியில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று போட்டியிட்டுருந்ததுடன் இலங்கைக் குழுவின் இந்த வெற்றி, சர்வதேச அளவில் நாட்டின் அழகுக்கலைத் திறனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

எஸ். ரஜீவன்