அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் – அமெரிக்கா பேச்சு
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்று தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஈரான் அறிவித்துள்ளன.
அத்துடன் குறித்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தகவல் வௌியாகியுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படைப் பிரிவுடன் தொடர்புடைய ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
யுத்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலையை விட தற்போது கப்பல் போக்குவரத்து 90% குறைவாகவே உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உட்பட சில அதிகாரிகள், இந்த முக்கியமான கடல்வழிப்பாதை மூடப்படவில்லை என்றும், அது எதிரி நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும் பலமுறை கூறியுள்ளனர்.
உதாரணமாக, ஈரான் விதிக்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளிலிருந்தும் ஈராக் விலக்களிக்கப்படுவதாக ஈரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் நேற்று அறிவித்திருந்தார்.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஈரானிய அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
யுத்தத்தினால் ஏற்பட்ட அனைத்து சேதங்களையும் ஈடுசெய்ய, கப்பல் போக்குவரத்து மூலம் கிடைக்கும் சுங்க வரியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் போது ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

