24 மணிநேரத்தில் 1069 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 28 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக நாட்டில் நாளாந்தம் 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்களே பதிவாவதாகவும், தற்போதைய ஆபத்தான சூழ்நிலையுடன் அண்மைய நாட்களாக நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சூழலிலேயே நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது.
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், இந்த நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வைத்தியர் கபில கன்னங்கர மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, நோயாளர்களைக் கவனித்துக்கொள்வதில் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்களும் தற்போது கடுமையான மன மற்றும் உடல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர கூறினார்.
இந்தக் கடுமையான அழுத்தமான சூழ்நிலை காரணமாக, எதிர்காலத்தில் நோயாளர்களின் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

