வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் ஊழலுக்கு இடமே இல்லை
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் தொடர்பான அறிக்கையானது கடந்த 30.11.2025 அன்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் பிரகாரம் 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிக்கையிட்டிருந்தோம். அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபா எமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
05.12.2025 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தின் பிரகாரம், முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதாவது, முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிக்குள் உள்ளடக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

