மத்திய வங்கியின் தீர்மானதால் அபாயம்!

மத்திய வங்கியின் தீர்மானதால் அபாயம்!

ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணய வருவாயை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம் குறித்து, அரசாங்க நிதி பற்றிய குழுவின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் இது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது மத்திய வங்கி அதிகாரிகள் குறிப்பிடுகையில், நாணய மாற்று வீதம் மற்றும் வெளிநாட்டு நாணய சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை, அதேபோல் வெளிநாட்டு நாணய திரவத்தன்மை பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தீர்மானமானது, நாணய மாற்று வீதத்தின் ஸ்திரமற்ற தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கும், வெளிநாட்டு நாணய விநியோகத்தை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு குறுகிய கால கொள்கை நடவடிக்கை என்றும், சந்தை நிலவரங்கள் வழமைக்குத் திரும்பியவுடன் அது தளர்த்தப்படும் என்றும் மத்திய வங்கி அதிகாரிகள் மேலும் கூறினர்.

இருப்பினும், இந்த நடவடிக்கையின் காரணமாக சந்தை மீதான நம்பிக்கை குறைவடைவதற்கும், வெளிநாட்டு நாணய சந்தையில் ஸ்திரமற்ற தன்மை அதிகரிப்பதற்குமான அபாயம் ஏற்படக்கூடும் என அரசாங்க நிதி பற்றிய குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஜூன் 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2492/10 வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட “2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஏற்றுமதி வருவாயை இலங்கைக்குக் கொண்டுவருதல் பற்றிய விதிகள்” உடன்படிக்கைக்கும் இக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய விதிகளின்படி, எந்தவொரு மாதத்திலும் ஏற்றுமதி வருவாயை இலங்கைக்குக் கொண்டுவரும் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள், அந்தப் பணத்தை அனுமதிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எஞ்சிய தொகையை, அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பாக அல்லது அன்றைய தினத்திற்குள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும்.

இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதி வரை எனக் குறைக்கப்பட்டுள்ளது.

manel