கடற்படை கைப்பற்றிய படகில் மீனுக்குப் பதில் 350 கிலோ போதைப்பொருள்!

கடற்படை கைப்பற்றிய படகில் மீனுக்குப் பதில் 350 கிலோ போதைப்பொருள்!

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 

இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று (02) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு குறித்த படகு கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில், அதில் இருந்த சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று நேற்று கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது. 

எஸ். ரஜீவன்

Related Posts