இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வு

இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடற்றொழில் மற்றும் மீன்வளத் துறைகளை நவீனமயப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் அறிவு பரிமாற்றம் போன்ற துறைகளை வலுப்படுத்த சவூதி அரேபியா முனைந்துள்ளது. 

சவூதி அரேபியாவின் “Vision 2030” தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மீன்வளர்ப்பு, மீன்வள மேலாண்மை, கடல் ஆராய்ச்சி மற்றும் நீரியல் வள மேம்பாட்டுத் துறைகளில் பெற்றுள்ள முன்னேற்றத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராட்டியதுடன், இலங்கையும் தனது வளமான கடல் பல்லுயிர் வளங்களையும், மூலோபாயமான இந்தியப் பெருங்கடல் இருப்பிடத்தையும் பயன்படுத்தி கடல்சார் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இரு தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், மீன்வளர்ப்பு மேம்பாடு, நவீன தொழில்நுட்ப பரிமாற்றம், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு, மீன்வள உயிரியல் பாதுகாப்பு, மேலும் தீவன உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

எஸ். ரஜீவன்