இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் குறைத்து, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்த பாராட்டுச் சான்றிதழ், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடரில் வைத்து இலங்கையிடம் இன்று (19) கையளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரநிலைகள் மற்றும் உலகளாவிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டும் வகையிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் அவர்களினால், இந்த பாராட்டுச் சான்றிதழ் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

