இனவாத அடிப்படையில் அரசு செயற்படுவது கவலையைத் தருகின்றது – இம்ரான் எம்.பி
இந்த அரசாங்கம் இனவாதத்தை ஒழித்து சகல சமுகங்களுக்கும் நியாயமான அடிப்படையில் செயற்படுவதாகக் கூறிக் கொண்டாலும் அது கிழக்கு மாகாணத்தில் இனவாதத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருவது கவலையைத் தருகின்றது என்று திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாகும். இந்த மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை பிரதம செயலாளராக நியமிக்கும் மனநிலை இந்த அரசாங்கத்திற்கு இல்லை. கடந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த கொள்கையையே இந்த அரசாங்கமும் இந்த விடயத்தில் கைக்கொண்டு வருகின்றது.
அதிலும் கவைலைக்குரிய விடயம் என்னவென்றால் பிரதம செயலாளராக இருக்கின்றவர் தற்போது விடுமுறையில் இருக்கின்றார். இதற்கான பதில் கடமையும் தமிழில் கடமையாற்ற முடியாத ஒருவருக்கே கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் இனவாதமில்லாத நியாயமான ஆட்சியை முன்னெடுப்பதாக ஊடகங்களில் கூறிக் கொண்டாலும் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்பத்த கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த நியமனங்கள் நல்ல உதாரணமாகும்.
ஆட்சியைப் பிடிக்க பலநூறு பொய்களை இந்த அரசாங்கம் சொன்னது இப்போது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிகின்றது. அதேபோல இனவாதமில்லை என்று பொய்யைக் கூறி தொடர்ந்து இனவாதத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது என்பதை இந்த நியமனங்களில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

