நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
தம்புத்தேகம நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நீராடும் பகுதியில் நேற்று (18) பிற்பகல் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் நீராடச் சென்றிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் மரண பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, நேற்று (18) நண்பகல் அனுராதபுரம் திசாவெவவில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நபரொருவர் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

