போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை ஸ்தாபிக்க நாளை சுற்றறிக்கை
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், நாளையே (17) கல்விச் செயலாளர் ஊடாக அந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படும் எனக் கூறினார்.
அதன்படி, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாகச் செயலாளர் ஊடாக நாளை வெளியிடப்படவுள்ளன.
அரசு சாரா நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவுவதற்காக ஜனாதிபதிச் செயலாளர் ஊடாக சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

