மசகு எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தென்படுவதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்; 105.33 டொலராக நிலைபெற்றுள்ளது.
அமெரிக்க டெக்சாஸ் எண்ணெய் ஒரு பீப்பாய் 94.40 டொலராகக் குறைந்துள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்க இஸ்லாமாபாத் செல்லவுள்ளார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காலையில் அதிகரித்திருந்த எண்ணெய் விலை சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விசேட தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்த செய்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
“ஈரான் தரப்பிலிருந்து ஒரு சலுகை வரவுள்ளது, அது என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று ட்ரம்ப் ரொய்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை தற்போது முடக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கமாண்டோக்கள் சரக்குக் கப்பல்களைச் சிறைபிடித்தது மற்றும் அப்பகுதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விநியோகத் தடை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் வெறும் 5 கப்பல்கள் மட்டுமே அந்தப் பாதையைக் கடந்துள்ளன.
ஏப்ரல் மாத இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், எண்ணெய் விலை இந்த ஆண்டின் புதிய உச்சத்தைத் தொடும் என ‘ஹைடாங் ஃபியூச்சர்ஸ்’ நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போதைய போர் நிறுத்தக் காலம் காலவரையன்றி நீட்டிக்கப்பட்டாலும், மோதல்கள் தொடர்ந்தால் குறிப்பாக டீசல் மற்றும் பிரெண்ட் எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

