விமான நிலையத்தில் 4 கிலோ போதைப் பொருளுடன் மூவர் கைது

விமான நிலையத்தில் 4 கிலோ போதைப் பொருளுடன் மூவர் கைது

சுமார் நான்கு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் மூன்று நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்த மூன்று விமானப் பயணிகளே இவ்வாறு விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்களின் பயணப் பைகளுக்குள் இருந்து 4 கிலோகிராம் 22 கிராம் அளவிலான குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

இவர்கள் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

எஸ். ரஜீவன்