வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயர்!
புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அந்தத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன், வாகன உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட்டு இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களம் கூறியது.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா (அரசாங்க நிதி பற்றிய குழுத் தலைவர்):
“முன்னர் இலக்கத் தகடுகளில் மாகாணத்தைக் குறிக்கும் எழுத்துக்கள் இருந்தன.. இப்போது அவை நீக்கப்பட்டுள்ளன.”
பிரியந்த திசாநாயக்க (மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்):
“யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வாகனம் எந்தப் பகுதிக்குச் சொந்தமானது என்பதை இனங்காண ‘Frequency ID’ (அதிர்வெண் அடையாளம்) உடன் அவை வழங்கப்பட்டன. ஆனால் பொலிஸாரிடம் அந்த ID-களை வாசிப்பதற்கான கருவிகள் அப்போது இருக்கவில்லை. எனவே, அதனை நீக்கத் தீர்மானித்தோம். தற்போது அத்தகைய தேவை இல்லை.”
கலாநிதி ஹர்ஷ டி சில்வா:
“இந்தக் கருத்தைச் சொல்வதற்காக டட்லி என் மீது கோபப்பட மாட்டார் என்று நினைக்கிறேன். அண்மையில் டட்லி அவர்களின் கார் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். எமது நாட்டிலும் அவ்வாறான வாகன இலக்கத் தகடுகளில் ‘டட்லி’ என்பது போல உரிமையாளரின் பெயரைப் பொறித்துப் பெற முடியாதா?”
பிரியந்த திஸாநாயக்க:
“நிச்சயமாக முடியும். அந்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். எமது கணினி கட்டமைப்பு இற்றைப்படுத்தப்பட்டவுடன், இத்தகைய விசேட செயற்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.”

