மார்ச்சில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

மார்ச்சில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த மார்ச் மாதத்தில் 1,467 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. 

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் விடயத்தைக் குறிப்பிட்டார். 

அதன்படி, பொருட்களின் ஏற்றுமதி மூலம் 1,180 மில்லியன் அமெரிக்க டொலர்களும், சேவை ஏற்றுமதி மூலம் 286 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளன. 

இதன் மூலம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் ஏற்றுமதியில் 9% வளர்ச்சியை இலங்கை பெற்றுள்ளது. 

இருப்பினும், மத்திய கிழக்கு போர் காரணமாக கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் மார்ச் மாத ஏற்றுமதி வருமானம் 5.2% குறைவடைந்துள்ளது. 

அதேவேளை தேங்காய் சார்ந்த பொருட்கள், மின்னணுவியல் துறை, உணவு மற்றும் பானங்கள், மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கடந்த மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

பிராந்திய ரீதியாகப் பார்க்கும்போது, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ள அதேவேளை, ஐரோப்பிய, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. 

இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான ஏற்றுமதி வருமானம் மார்ச் மாதத்தில் 48% ஆல் குறைவடைந்துள்ளது. 

இதேவேளை, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் இலங்கை 4,308 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 2% வளர்ச்சியாகும். 

இதில் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 3,387 மில்லியன் டொலர்களும், சேவை ஏற்றுமதி மூலம் 921 மில்லியன் டொலர்களும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளன. 

ஒட்டுமொத்தமாக, மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியிலும் இலங்கை ஏற்றுமதி வளர்ச்சியைப் பெற்றுள்ளமை மிகவும் சாதகமான ஒரு விடயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

manel