சமாதான நடைபயணம் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்!
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணத்தை” (Walk for Peace) வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, பொதுமக்கள் ஒழுக்கத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நடைபயணம் முன்னெடுக்கப்படும் பாதையின் இருமருங்கிலும் திரண்டு கௌரவம் அளிக்கும் போது, கௌரவத்திற்குரிய பிக்குமார்களுக்கோ அல்லது தூதுக்குழுவினருக்கோ இடையூறு விளைவிக்காமல், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் வெளிநாட்டு தூதுக்குழுவினர், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிடம் ஆசி பெற்று இந்த நடைபயணத்தை ஆரம்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தம்புள்ளை நகரிலிருந்து ஆரம்பமான இந்த நடைபயணம் நாவுல, மாத்தளை, கண்டி, கடுகன்னாவை, கேகாலை, தோலங்கமுவ, கஜுகம, யக்கல, மஹர மற்றும் களனி வழியாக ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற “ஆலோகா” (Aloka) எனும் நாயும் இந்த சர்வதேச சமாதான நடைபயணத்தில் இணைந்துள்ளதுடன், வீதியின் இருமருங்கிலும் பெருமளவிலான மக்கள் திரண்டு கௌரவம் அளிப்பதையும் காண முடிகிறது.
எவ்வாறாயினும், சில இடங்களில் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளுவது, முண்டியடிப்பது, தேவையற்ற முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது, நாயைத் தொட முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நடத்தைகள் சமாதான நடைபயணத்திற்கு இடையூறாக அமைவதால், அனைவரும் ஒழுக்கமான மற்றும் கட்டுக்கோப்பான நடத்தையை வெளிப்படுத்துமாறு அதிகாரிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

