குழந்தைகளுக்கெனப் பணம் வசூலித்த மோசடிக் கும்பல் கைது
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.
ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள், பேஸ்புக்கில் பரவிய அந்தப் பதிவுகளைப் பார்த்து, விசாரணை செய்து, தங்கள் குழந்தைக்கு உதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர்.
நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் ஊடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப தரவுகளைப் பெற்று, சமீபத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது.
அதன் விளைவாக, மோசடியாக நிதி சேகரிக்கும் சிலருக்கு சொந்தமான ஆறு பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டன.
அதில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு, நீண்ட காலமாக பணம் ஈட்டிய மோசடி ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதற்கு முன்னர், போலி கணக்குகளுக்கு பணம் செலுத்திய பல நன்கொடையாளர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியை மேற்கொண்ட மூவர் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

