கந்தப்பளையில் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்கள் முற்றாகச் சேதமடைந்து, தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், தற்போது அறுவடைக் காலம் என்பதால், இந்த அழிவின் காரணமாகத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் பல்வேறு துணைத் தொழில்களும் இதனால் நலிவடைந்து வருகின்றன.
நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள மரக்கறித் தோட்டங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் மலைநாட்டு மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரட், லீக்ஸ், கோவா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.
தொடர் மழையினால் தாழ்வான விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், அறுவடைக்குத் தயாராக இருந்த மரக்கறிகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன அல்லது மண்ணில் புதைந்து போயுள்ளன. அத்துடன், வெள்ள நீர் காரணமாகப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்கங்கள் அதிகரித்து, மரக்கறிகளைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விளைச்சலைக் குறைத்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

