ஈரானுடனான ஆரம்ப ஒப்பந்த விபரங்களை வெளியிடத் தயாராகும் ட்ரம்ப்!
ஈரானுடன் எட்டப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் விபரங்கள் மிக விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜி7 (G7) உச்சிமாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, “இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்திடப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகளும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்த சில தகவல்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படும் அன்றைய தினமே, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறந்து விடப்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவது அல்லது முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகள், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? என்பதைப் பொறுத்தே அமையும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

