இன்று நண்பகல் 12:10 மணிக்கு சூரியன் உச்சியில் இருக்கும்
எதிர்வரும் நாட்களில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு உகந்த வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சூரியன் தெற்கு நோக்கி நகர்வதால், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அண்மை அட்சரேகைகளில் அது நேர் உச்சியில் காணப்படும்.
இந்நிலையில் இன்று (02) நண்பகல் 12:10 மணிக்கு, அனமடுவ, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாளைச்சேனை ஆகிய இடங்களில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

