அனர்த்த நிவாரணம்: 25,000 வழங்கும் பணிகளில் முன்னேற்றம்
அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையின் கீழ், 25,000 ரூபாய் கொடுப்பனவு 50 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய இழப்பீடுகளை வழங்குவதற்காக அரச அதிகாரிகள் தற்போது மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில், கம்பஹா மாவட்டத்தில் 73.4 சதவீதமானோருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 70.05 சதவீதமானோருக்கும், இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 68.39 சதவீதமானோருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 65.28 சதவீதமானோருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 61.42 சதவீதமானோருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சில மாவட்டங்களில் இந்த கொடுப்பனவு வழங்கல் செயற்பாடுகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதன் காரணமாக, இந்த செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கொடுப்பனவு தொடர்பான சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி தலைமையில் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும்,நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக சுமார் 22 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்தத்தினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகுமென அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

