பிரதி அமைச்சர் கேகாலை மாவட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் கலந்துரையாடல்
கேகாலை மாவட்டத்திலுள்ள 67 பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக அதிபர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (17 ) கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் நிஷாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்மாவட்ட பாடசாலைகளின் 3122 மாணவர்கள், 782 ஆசிரியர்கள், மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் இடைவிலகல் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அதிபர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது பெருந்தோட்ட பாடசாலைகளை மாதிரி பாடசாலைகளாக மாற்றுதல், தகவல் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுதல், விளையாட்டு மைதானம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அதிபர்களின் பிரச்சினைகளாக நிதி ஒதுக்கீடுகளின் தாமதம், நிர்வாக பிரச்சினைகள், பெற்றோர்- ஆசிரியர் ஒத்துழைப்பு போன்று அதிபர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உடனடி தீர்வு வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர், கேகாலை மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பெருந்தோட்ட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “பெருந்தோட்ட பாடசாலை என்பது வெறும் கட்டிடமோ வரைபடமோ அல்ல, அது எமது சமூகத்தின் எதிர்காலம். அதிபர்களே இந்த மாற்றத்தின் முன்னோடிகள்.
உங்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண்பதே எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கம்” என தெரிவித்தார்.

