ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில்

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில்

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) நேற்று (24) இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளார். 

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஈரான் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

எனினும், அந்த முன்மொழிவில் உள்ள விடயங்கள் குறித்து தமக்கு இன்னும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். 

ஈரான் வெளியுறவு அமைச்சரின் பாகிஸ்தான் விஜயம் தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ‘X’ தளத்தில் இட்டுள்ள பதிவில், அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லையெனத் தெரிவித்துள்ளார். 

இருப்பினும், இந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்னதாக அமெரிக்கா வெளியிட்ட தகவலில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க விசேட பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று (25) காலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கிய அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸூம் பாகிஸ்தான் செல்வதற்குத் தயாராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

manel