இறக்குமதி கொடுப்பனவு குறித்த வர்த்தமானி தொடர்பில் விளக்கம்

இறக்குமதி கொடுப்பனவு குறித்த வர்த்தமானி தொடர்பில் விளக்கம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் நோக்கம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். 

விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர், இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை முறையாக ஆய்வு செய்து, வெளிநாட்டு செலாவணி தேவையின்றி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என வலியுறுத்தியுள்ளார். 

சில தரப்பினர் போலி நிறுவனங்களை பதிவு செய்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறை போர்வையில் வெளிநாட்டு செலாவணியை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளமை அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

புதிய வர்த்தமானி அறிவித்தலின் கீழ், இறக்குமதியாளர்களின் முகவரி, கணக்கு இலக்கம், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் கொடுப்பனவு செய்யப்படும் நாணயம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முறையாகப் பெறப்பட வேண்டும். 

ஒவ்வொரு வங்கியும் தனித்தனி கொடுக்கல் வாங்கல்களுக்காக தனித்தனியான இலக்கத்தைப் பேண வேண்டும் என்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

manel