அனைத்துப் பயிர்களையும் உள்ளடக்கி காப்புறுதி!
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால், அனைத்துப் பயிர்களையும் உள்ளடக்கிய வகையில் காப்புறுதித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தப் பயிர்ச்செய்கைகளுக்கு இயற்கையாக ஏற்படும் பேரிடர்களை ஈடு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக கறுவா, இறப்பர், வாழை, தேயிலை மற்றும் தென்னை ஆகிய பயிர்ச்செய்கைத்துறைகள் இதில் முன்னுரிமை பெற்றுள்ளன.
இதற்கு மேலதிகமாக, விதை நெல் பண்ணைகளை இலக்கு வைத்தும் காப்புறுதித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அனைத்துப் பயிர்ச்செய்கைக் காப்புறுதித் திட்டங்களுக்கும் சலுகைக் கட்டண அடிப்படையிலான பிரீமியம் தொகையின் கீழ் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதுடன், எதிர்பாராத அவசர மற்றும் இயற்கை பேரிடர்களின் போது தங்களது பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை இதன் மூலம் ஈடு செய்துகொள்வதற்கான வாய்ப்பு உள்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகத் தொடர்ச்சியாக ஏற்படும் வறட்சி நிலைமைகள் மற்றும் அதிக மழை வீழ்ச்சியினால் பயிர்ச்செய்கைகள் அடிக்கடி ஆபத்துக்குள்ளாகின்றன.
குறிப்பாக, தற்போது ஏற்பட்டு வரும் ‘எல் நினோ’ (El Niño) இயற்கை பேரிடர் நிலைமையினால் விவசாயத்துறைக்குக் கடுமையான ஆபத்து ஏற்படக்கூடும் என்பது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் தலைமை அலுவலகத்திலிருந்தும், நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 30 மாவட்ட அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், 1918 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலமும் தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

