பிரான்சில் மதீஷ பத்திரனவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரனவுக்கு, இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரான்சில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் தற்போது முழுமையான குணமடையும் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய மதீஷ பத்திரனவின் முகாமையாளர் அமில களுக்கலகே, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அவர் மீண்டும் களமிறங்குவதற்கான அடுத்தகட்டப் பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, “இந்தச் செயல்முறை முழுவதும் அவரது நல்வாழ்வுக்காகச் சிறந்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகத்திற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் விரைவில் முழு பலத்துடன் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதற்காகக் கடினமாக உழைத்து, முழு கவனத்துடன் செயல்பட்டு மீண்டும் தனக்குப் பிடித்தமான கிரிக்கெட் களத்திற்குத் திரும்புவார். முன்னெப்போதையும் விட வலிமையோடு அவர் களம் திரும்புவதைக் காண நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
மதீஷ பத்திரன, அடுத்ததாகத் தீவிர உடற்தகுதிப் பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அவர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பது குறித்துத் தீர்மானிக்கப்படும். எனினும், அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குத் திரும்புவதற்கான காலக்கெடு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

