கௌதம் அதானிஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார்!
அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, அதானியின் நிகர சொத்து மதிப்பு தற்போது 92.6 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. அதேவேளை, அம்பானியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டொலர்கள் என அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவர்கள் இருவரும் உலகின் பெரும் செல்வந்தர்கள் 20 பேரின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். அதன்படி, உலக அளவில் அதானி 19வது இடத்திலும், அம்பானி 20வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் முதல் 8 பெரும் செல்வந்தர்களும் அமெரிக்கர்களாவர். இதில் எலன் மஸ்க் 656 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் நீடிக்கின்றார். இரண்டாம் இடத்தில் 286 பில்லியன் டொலர்களுடன் லாரி பேஜ் உள்ளதோடு, 269 பில்லியன் டொலர்களுடன் ஜெப் பெசோஸ் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

