இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கௌரவ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2025 மே 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூட் இமாட் அவர்கள் விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரேஹாணதீர உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார இலங்கை – மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதாரத் துறைகளில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் ஆழமான இருதரப்பு உறவுகளை இரு தரப்புப் பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர்.

அத்துடன், பொது அக்கறை சார்ந்த விடயங்களில் சர்வதேச தளங்களில் இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இதன்போது வெளிப்படுத்தினர்.

அத்துடன், மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கும், பாராளுமன்ற இராஜதந்திரத்திற்கு அப்பால் மக்களுக்கு இடையேயான உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக செயல்படும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

manel