RDA இரட்டை கொடுப்பனவு: நளின் பண்டாரவின் குற்றச்சாட்டை மறுக்கும் பிரதியமைச்சர்
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான கணக்கிலிருந்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு கணக்கிலிருந்தோ எந்தவொரு நிறுவனத்திற்கும் அல்லது ஒப்பந்தக்காரருக்கும் ஒரே கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்படவில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முறையற்ற கொடுப்பனவு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
அதேபோல், கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட அந்த கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அது முற்றிலும் பொய்யான கூற்று எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
“இலங்கை வங்கியின் ஊடாகவோ, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்கிலிருந்தோ அல்லது வேறு எந்தவொரு கணக்கிலிருந்தோ ஒரு சதம் தானும் இரட்டை கொடுப்பனவாக (Double Payment) வழங்கப்படவில்லை என்பதை நாம் உறுதியாகக் கூறுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறும் விடயங்கள் முற்றிலும் தவறானவை.” என்றார்
கேள்வி: அப்படியானால் இலங்கை வங்கி (BOC) ஊடாக இது நடந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
“அது குறித்து இலங்கை வங்கியிடமே கேட்க வேண்டும். எமது பிரதான கணக்கிலிருந்து ஏதேனும் ஒரு தொகையை அனுப்ப வேண்டியிருந்தால், நாம் அந்தத் தொகையை மற்றொரு கணக்கில் வைப்பிலிட்டு, இவர்களுக்கு பணம் செலுத்துமாறு பரிந்துரைப்போம். அதன் பின்னரே அவர்கள் பணத்தை செலுத்துவார்கள். அதைத் தவிர நாம் மீண்டும் பணம் வைப்பிலிட்டால் மட்டுமே அவர்கள் மீண்டும் பணம் செலுத்துவார்கள். எமது கணக்குகளில் நாம் பணம் போடாமல் இலங்கை வங்கி தானாக பணம் செலுத்தாது.”
“வங்கி ஒன்றின் தவறினால் மேலதிக கொடுப்பனவு (Overpayment) ஏதேனும் இடம்பெற்றிருந்தால், அது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பல்ல. அது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பணமும் அல்ல. அது வங்கிக்கும் ஒப்பந்தக்காரருக்கும் இடையில் தற்செயலாக நடந்த ஒரு விடயமாக இருக்கலாம். அது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் வங்கிக்கும் இடையிலோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் ஒப்பந்தக்காரருக்கும் இடையிலோ இடம்பெற்ற ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.

