ஹொரணை – இரத்தினபுரி வீதியில் விபத்து, 15 பேர் வைத்தியசாலையில்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் விபத்து, 15 பேர் வைத்தியசாலையில்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், சிறிய லொறி இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel