இஸ்ரேல் மோதலை நிறுத்தும் வரை எந்த பேச்சு வார்த்தைக்கும் இடமில்லை – ஈரானிய வெளிவிவகார அமைச்சு

இஸ்ரேல் மோதலை நிறுத்தும் வரை எந்த பேச்சு வார்த்தைக்கும் இடமில்லை – ஈரானிய வெளிவிவகார அமைச்சு

இஸ்ரேலுடன் மோதல் இடம்பெற்று வரும் நிலையில் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க போவதில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. 

ஈரான் மீது நீடித்த தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்த சில மணித்தியாலங்களுக்கு பின்னர் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். 

நேற்றிரவு வடக்கு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதுடன், ஈரானில் உள்ள பல இடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த நிலையில் எதிர்வரும் நாட்கள் கடினமானதாக இருக்கும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் காணொளி ஒன்றை வெளியிட்டு அந்த நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஈரானிய வெளிவிவகார அமைச்சரை ஜெனீவாவில் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அவர்கள் ஈரான் வெளிவிவகார அமைச்சரை வலியுறுத்தியுள்ளனர். 

எவ்வாறாயினும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டால் மாத்திரமே இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை பரிசீலிக்க முடியும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

தங்களது அணுசக்தி திட்டம் அமைதியான முறையில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய ஈரானிய வெளிவிவகார அமைச்சர், இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே, தங்களை பாதுகாத்து கொள்வதற்காக ஈரான் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

manel