திருகோணமலையில் புலம்பெயர் பெற்றோரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
புலம்பெயர் பெற்றோரின் பிள்ளைகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விசேட நிகழ்ச்சி இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் திரு. அருண் ஹேமச்சந்திரா தலைமை தாங்கினார்.
114 மாணவர்களுக்கு ரூ. 3.6 மில்லியன் நிதியுதவி: 2024 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (O/L) மற்றும் உயர் தரம் (A/L) ஆகிய தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற புலம்பெயர் பெற்றோரின் 114 பிள்ளைகள் இந்த உதவித்தொகைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகையாக மொத்தம் ரூபா 3.605 மில்லியன் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
ஊழல் நிறைந்த அமைப்பு தற்போது சரியான பாதையில்” – பிரதி அமைச்சர்
இந்நிகழ்வில் முதன்மை உரையாற்றிய பிரதி அமைச்சர் திரு. அருண் ஹேமச்சந்திரா குறிப்பிடுகையில்
கடந்த காலத்தில் பெருமளவிலான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் சீர்கேடுகளுக்கும் உள்ளாகியிருந்த இந்த அமைப்பானது, தற்போதைய தலைவர் மற்றும் அமைச்சர் விஜய ஹேரத் ஆகியோரின் முறையான வழிகாட்டலின் கீழ், தற்போது ஊழலற்ற முறையில் சரியான பாதையை நோக்கி வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்
இவ்விழாவில் திருகோணமலை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். சுதரன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட மேலாளர் திலக் விஸ்வகுளதிலகா, மாவட்ட செயலக அதிகாரிகள், பணியக அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

