கஹதுடுவ – ரிலாவல சந்தியில் விபத்து
அதிக விபத்துக்கள் நிகழும் கஹதுடுவ – ரிலாவல சந்தியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த மாணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – ஹொரணை வீதியில் கொழும்பிலிருந்து கஹதுடுவ நோக்கி மாணவர் பயணித்தபோது, ஹொரணை திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வீதியின் குறுக்கே கிரிகம்பமுனுவ திசைக்குத் திரும்பியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அது எதிர்த் திசையிலிருந்த அதிர்ஷ்டச் சீட்டு விற்பனை நிலையம் ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துகையே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் வேதர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதியை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

