கட்டுநாயக்கவில் 51 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்கவில் 51 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகுதியொன்றைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். 

இந்த சிகரெட் தொகுதியைச் சட்டவிரோதமாகக் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் ‘பசுமை வழி’ ஊடாக வெளியே எடுத்துச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவரை இன்று (19) அதிகாலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இவர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து, தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 34,000 சிகரெட்டுகளைக் கொண்ட 170 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க விசாரணைகளின் பின்னர், குறித்த சிகரெட்டுகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

manel