29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல தெரிவித்துள்ளார். 

திருகோணமலை பகுதியில் நடைபெற்ற முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இந்தக் கறுப்பு வணிகத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று விநியோக வலைப்பின்னல், மற்றொன்று தேவை. 

திருகோணமலை துறைமுகத்திற்கு படகு மூலம் கொண்டு வரப்படும் போதைப்பொருளை இங்குள்ள இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். 

எனவே, இந்தத் தேவையை இல்லாது செய்ய நாம் தீர்மானித்தோம். இதற்கு முந்தைய அரசாங்கங்கள் இந்த விநியோக வலைப்பின்னலில் கை வைக்கவில்லை. 

ஆனால், தற்போதைய அரசாங்கம் விநியோகச் சங்கிலியின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைக்கத் தீர்மானித்தது. 

இந்தச் சங்கிலித் தொடர் கடற்கரையுடனோ அல்லது விமான நிலையத்துடனோ நின்றுவிடக் கூடாது. குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று இதுவரை 29 முக்கிய விநியோகஸ்தர்களைக் கைது செய்துள்ளனர். 

குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இதனால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். 

இது இலகுவாகப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வணிகம். இதில் மூன்று வணிகங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை நாம் அறிவோம். 

போதைப்பொருளுடன் தொடர்புடைய பாதாள உலகம் உள்ளது. பாதாள உலகத்துடன் தொடர்புடைய சட்டவிரோத ஆயுதக் கடத்தல் உள்ளது. போதைப்பொருள், பாதாள உலகம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் என இந்த ஒட்டுமொத்தக் கறுப்பு வணிகமும் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. 

அரசியல் அதிகாரத்தின் பின்னணியில்தான் இது வளர்ந்தது. தியவன்னாவே இதனைப் போஷித்தது. 

தங்களது தேர்தல் பிரச்சாரங்களை இந்தக் கறுப்பு வணிகத்தின் மூலம் வரும் பணத்தைக் கொண்டே அவர்கள் முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

manel