வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் பலி

வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண் ஒருவர், இளைஞர்கள் இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (16) சிலாபம் , குளியாப்பிட்டி, புல்மோட்டை, தவுலகல, மிகிந்தலை மற்றும் சீகிரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. 

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் மாயிக்குளம் பகுதியில், இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பேருந்தின் முன் கதவிலிருந்து தவறி விழுந்து அதே பேருந்தில் சிக்குண்டதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பயணி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவராவார். 

இதேவேளை, குளியாப்பிட்டி – ஹெட்டிபொல வீதியின் கரகஹகெதர பகுதியில், கார் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், அந்தக் கார் மின்சாரக் கம்பத்திலும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (பெண்), அதன் பின்னால் பயணித்தவர் மற்றும் கார் சாரதி ஆகியோர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் உயிரிழந்தார். உயிரிழந்தவர் முனமல்தெனிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணாவார். 

புல்மோட்டை, போகஸ் சந்தி வீதியின் 14 ஆம் கட்டைப் பகுதிக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த கொள்கலன் ஏற்றிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மகாசென்புர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார். 

தவுலகல – பிலிமத்தலாவ பிரதான வீதியின் பமுனுவ பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்து விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த குறித்த பெண் பமுனுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 75 வயதுடைய வயோதிபப் பெண்ணாவார். 

மாத்தளை சந்தி – கல்குளம வரையான வீதியின் குருந்தன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார். 

இதேவேளை, தம்புள்ளை – ஹபரணை வீதியின் திகம்பத்தஹ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, குறித்த கெப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் வீதியைக் குறுக்காகக் கடந்த காட்டு யானை ஒன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கெப் வாகன சாரதி மற்றும் அதன் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திகம்பத்தஹ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

எஸ். ரஜீவன்