லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழப்பு

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழப்பு

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) மாலை லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார். 

விங் கமாண்டராகப் பதவி வகித்த அவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்த விமானி 41 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவதற்கு விமானப்படை நேற்று (30) முற்பகல் முதல் பெரும் பங்களிப்பை வழங்கி வந்தது. அச்சமயத்திலேயே லுணுவில, கிங் ஆற்றில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது. 

விபத்துக்குள்ளான வேளையில், லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கு விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பாக தரையிறங்க முயற்சித்த வேளையில், பாலத்தில் மக்கள் தங்கியிருந்தமையால் அந்த முயற்சி தடைப்பட்டது. 

அப்போதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஹெலிகொப்டரில் பயணித்த விமானிகள் உட்பட 5 பேரும் மீட்கப்பட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எஸ். ரஜீவன்