முதன்முறையாக தொழிற்சங்க அழுத்தமின்றி சம்பள உயர்வு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நேரடியாக உயர்த்துவதற்கு அரசு எடுத்த நடவடிக்கையை ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவர் பாரத் அருள்சாமி பாராட்டியுள்ளார்.
இந்த திட்டத்தின் படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.200 சம்பள உயர்வு மற்றும் வருகை ஊக்கத்தொகை ரூ.200 வழங்கப்பட உள்ளது. இதனால், தற்போது ரூ.1350 ஆக வழங்கப்படும் நாட்சம்பளம் ரூ.1750 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இது வரலாற்றில் முதல் முறையாக வரவு செலவு திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் நேரடியாக உயர்ந்துள்ளது. எந்த தொழிற்சங்க அழுத்தமும் அரசியல் பேதங்களும் இல்லாமல், பொறுப்பான பேச்சுவார்த்தை மற்றும் நேர்மையான அணுகுமுறையின் மூலம் இது எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வரவு செலவு உரையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் இடைவிடாத முற்போக்கான சிந்தனையையும் பெருந்தோட்ட சமூகத்திற்கான முயற்சிகளையும் நேரடியாக பாராட்டியதையும் பாரத் அருள்சாமி வரவேற்றார். தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான திகம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் இந்த முயற்சியை பாராட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

