மருந்து பற்றாக்குறை ஓரிரு மாதங்களில் நீங்கும்

மருந்து பற்றாக்குறை ஓரிரு மாதங்களில் நீங்கும்

மருந்து பற்றாக்குறை ஓரிரு மாதங்களில் நீங்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மருந்துகளுக்கன கேள்விப் பத்திரங்கள் (டெண்டர்) முறையாக கோரப்படாத காரணத்தால், தற்போது சில மருந்துகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கண்டி தேசிய மருத்துவமனையின் ‘சுவ பியச’ புற்றுநோய் சிகிச்சை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இவ்வாறு தெரவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் மருந்துகளுக்கான கேள்வி விண்ணப்ப நடைமுறைகள் உரிய அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தற்போது சில மருந்து வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, அதற்கு மாற்று வழியாக அரச வைத்திய சாலைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தகைய மருந்துப் பொருட்களை தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசு 3500 இலட்ச ரூபாவை ஒதுக்கியுள்ளது.

நாட்டில் அரிசி, மா போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக கேள்வி மனுக்களை கோரி இரண்டு மூன்று வாரங்களில் அதனை கொண்டு வந்து சேர்க்க முடியும்.

ஆனால் மருந்துப் பொருட்களுக்கு அவ்வாறு செய்ய முடியாது. மருந்துக்கான விலை மனு கோரப்பட்ட பின்பு தான் அந்நிறுவனங்கள் அவற்றை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.

எனவே சில மருந்துப் பொருட்களுக்கு கேள்வி மனுக்கோரி, அதனைப் பரிசீலித்து குறிப்பிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பின்தான் அவர்கள் அதனைத் தயாரித்து பொதி செய்து அனுப்பி வைக்க நடவடிகை எடுப்பார்கள்.

சில நேரங்களில் ஒரு வருடகாலமும் செல்வதுண்டு. உணவு உற்பத்தி போன்றவை அப்படியல்ல. அறுவடை இயல்பாகவே முடிவடைந்து அவற்றை நுகர்வதற்கு வசதியளிக்கப்படுகிறது.

எனவே எதிர்காலத்தில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலத்தில் மருந்துகள் தொடர்பான டெண்டர் முறையாக சமர்ப்பிக்கப்பட்டு ஓடர்கள் வழங்கப்பட்டிருந்தால், மருந்துகள் சரியான நேரத்தில் வந்திருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கான டெண்டர் பணிகளில் சுமார் 80% ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

அதன்படி கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் முடிவுகள் அடுத்த நவம்பர் மாதத்திற்குள் கிடைக்கும்.

எனவே, தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும். தற்போதைய மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மருந்து விநியோகப் பிரிவால் வழங்கப்படாத மருந்துகளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சில மருந்துகள் அரசு வைத்தியசாலைகளில் மட்டுமல்ல, தனியார் சந்தையிலும் கிடைக்கவில்லை. எனினும், மருந்து பற்றாக்குறை ஓரிரு மாதங்களில் நீங்கும்.

அத்தகைய மருந்துகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும், சில வழங்குநர்கள் அவற்றை இறக்குமதி இசய்யவில்லை. இது பல சிக்கல்களுக்கு வழிவகுத்தது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரேஷா பெர்னாண்டோ உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

எஸ். ரஜீவன்