பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுடன் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடல்!

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுடன் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடல்!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் அலுவலகத்தில் இன்றைய தினம் (08.07.2026) விசேட சினேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் மலையகப் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.

மலையகத்தின் நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் பிரதி அமைச்சர் அவர்கள் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை எனவும், மக்கள் மத்தியில் அதன் சாதகமான தாக்கங்கள் தென்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், மலையக மக்களின் முன்னேற்றமே தமது முதன்மையான இலக்கு எனவும், மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

மலையகத்தின் நிலையான அபிவிருத்திக்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய இந்த சந்திப்பு, மலையக அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முக்கியமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

manel