ஜனாதிபதியைச் சந்தித்த பஞ்ஞாகர தேரர்!

ஜனாதிபதியைச் சந்தித்த பஞ்ஞாகர தேரர்!

“ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தின் நிறைவு அரச விழாவினைத் தொடர்ந்து, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் நேற்று (29) இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், பௌத்த மதத்தின் உரிமையை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதற்குமாக இலங்கையில் 07 நாட்களாக இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் இந்த அமைதி நடைபயணத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கு வழங்கப்பட்ட அரச அனுசரணைக்கு நன்றி தெரிவித்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர், இது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் ஒரு அனுபவம் எனத் தெரிவித்தார்.

இலங்கையையும் உலகையும் இணைக்கும் ஒரு உயிருள்ள தர்மப் பாலமாகச் செயற்படும் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள “தம்மசேதிய”  திட்டத்திற்காக, ஜய ஸ்ரீ மஹா போதியின் புனிதமான போதி மரக் கன்றொன்றைப் பரிசளித்தமைக்கும், அமெரிக்காவின் “ஹன் தாவோ”  விபஸ்ஸனா தியான மையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் விழாவில் புனிதத் தாதுக்களைக் காட்சிப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியமைக்கும் அவர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், நடைபயணத்தின் போது “ஆலோகா” நாய் மற்றும் ஏனைய விலங்குகள் மீது காட்டப்பட்ட அன்பு, பாதுகாப்பு மற்றும் கருணை என்பவற்றையும் அவர் பாராட்டினார். இந்தத் தாராள மனப்பான்மை, நம்பிக்கை மற்றும் உயரிய உபசரிப்புக்காக மகா சங்கத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட ஒட்டுமொத்த இலங்கை மக்கள், பாதுகாப்புப் படையினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கால்நடை மருத்துவக் குழுவினர், மருத்துவக் குழுவினர் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த அமைதி நடைபயணத்தின் ஊடாக இலங்கையில் ஏற்பட்ட பௌத்த எழுச்சியைத் தொடர்ந்தும் பேணி, இலங்கையை அமைதி மற்றும் மனிதாபிமானத்தின் தீவாக உயர்த்துவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார். அத்துடன் உலக அமைதிக்காக வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் முன்னெடுக்கும் அர்ப்பணிப்புக்காக ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி தனது நன்றியினைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் வணக்கத்திற்குரிய மெல்பிட்டியே விமலக்கித்தி தேரர், தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தேசிய வடிவமைப்பு மத்திய நிலையத்தின் தலைவர் சிசிர அமரபந்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.

manel