கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் பலி

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் பலி

வெலிபென்ன பொலிஸில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவர் அளுத்கம – மாத்தறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது. 

நேற்றிரவு (15) ஜீப் வண்டியில் அளுத்கம – மாத்தறை வீதியில் லபுவெல்கொட சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், அந்த வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த உத்தரவிட்டனர். 

இதன்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது மோதியுள்ளது. 

மோதிய வேகத்தில் பொலிஸ் சார்ஜன்ட் வீசி எறியப்பட்டு அருகில் இருந்த வடிகாலுக்குள் விழுந்ததில், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

உடனடியாக அவரை அளுத்கம தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ,அதற்கு முன்னரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

எஸ். ரஜீவன்