தொழிலாளர்களுக்கு நாலாயிரம் வழங்கினால்கூட ஆதரிப்போம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள அதிகரிப்பை எதிரணி எதிர்ப்பதாக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் தர்க்கம் ஏற்புடையது அல்ல. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால்கூட அதனை ஆதரிப்போம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு எதிரணி எதிர்ப்பு இல்லை. எனவே, வரவு- செலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை எதிர்ப்பவர்கள் என ஆளுங்கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் தர்க்கத்தை ஏற்க முடியாது. அப்படியானால் பாதீட்டில் சம்பள விடயம் மட்டும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
2,138 ரூபா நாள் சம்பளம் அவசியம் என ஜே.வி.பியின் தொழிற்சங்கவே வலியுறுத்தி இருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால்கூட அதனை எதிர்க்க மாட்டோம். ஆனால் சம்பள உயர்வை வழங்குவதற்குரிய நடைமுறை உள்ளது. சட்டரீதியில் அவர்களுக்கு சம்பள உரிமையை வழங்க வேண்டும். “- என்றார்.

