தென்னகோன் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கமா?
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான பிரேரணை இன்று (05) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
அதிகாரிகள் நீக்கல் (செயல்முறை) சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், தற்போதைய பொலிஸ் மா அதிபரை அகற்றும் காரணங்களை விசாரிக்க மற்றும் அறிக்கையிட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் நடைமுறைகளுக்கிணங்க அமைக்கப்பட்ட அந்த விசாரணைக் குழுவின் அதிகாரபூர்வ முடிவுகள் அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பத்மன் சூரசேன தலைமையிலான குறித்த விசாரணைக் குழுவில், மேன்முறையீடு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவல, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் லலித் எகநாயக்க ஆகியோர் அதன் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.
இந்த குழு நடத்திய விசாரணையின் முடிவில், குறித்த அதிகாரி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சட்டத்தின் பிரிவு 8(2) இற்கு அமைய குற்றவாளி என ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டத்தின் பிரிவு 17 இற்கிணங்க, குறித்த குற்றவாளி என்பது தொடர்பான தீர்மானம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இது குறித்து விவாதித்து வாக்களிப்பதற்கு இன்றையதினத்தில் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

