சட்டவிரோத தொலைக்காட்சி ஒளி பரப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோத தொலைக்காட்சி ஒளி பரப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்தி நடாத்திச் செல்லப்பட்ட தொலைக்காட்சி ஔிபரப்பு நிலையம் ஒன்றை கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதுடன், வெளிநாட்டு சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்திடிய வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இந்த ஔிபரப்பு நிலையம் நடத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சோதனை பிடியாணையின்படி நேற்று (19) இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த கூட்டு முற்றுகையை முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அலைபரப்பு உபகரணங்களுடன், இந்த சட்டவிரோத நிலையத்தை நடத்திச் சென்ற வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுபோவில பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இங்கு தோராயமாக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொடர்பாடல் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

manel