விரைவில் வருகிறது PayPal!

விரைவில் வருகிறது PayPal!

நாட்டில் PayPal சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மற்றும் தொழில்நுட்பக் கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தச் சேவையானது இலங்கையின் டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பல புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும். 

குறிப்பாக, உலகச் சந்தையில் தமது சேவைகளை வழங்கும் திறமையான இளம் தலைமுறையினர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் (Freelancers), தமக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நிலவும் தடைகள் இதன் மூலம் நீக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதித் துறை மூலம் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியின் அளவை அதிகரிப்பதற்கு இத்திட்டம் நேரடிப் பங்களிப்பை வழங்கும். 

இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான டிஜிட்டல் தொழில்முனைவோர், உலகின் எந்தவொரு நாட்டிலும் உள்ள நுகர்வோருக்குத் தமது தயாரிப்புகளை எளிதாக விற்பனை செய்வதற்கான வாய்ப்பை இந்தச் சேவை வழங்கும்.

அத்துடன், இலங்கையில் நாணயப் பயன்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களைப் பிரபலப்படுத்தவும், நிதித் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் இது ஒரு காரணியாக அமையும்.

சர்வதேச சமூகத்துடன் எந்தவிதமான தொழில்நுட்பத் தடைகளுமின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடிய “டிஜிட்டல் வலுவூட்டப்பட்ட இலங்கை”யை உருவாக்குவதே தமது அமைச்சின் இறுதி இலக்கு என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

manel