டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆரம்பமானது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தமை மற்றும் சரியான விசாவின்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான டயானா கமகேவிடம் நீதிமன்றினால் குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்ட நிலையில், அக்குற்றச்சாட்டுகளுக்குத் தான் நிரபராதி என அவர் நீதிமன்றில் அறிவித்தார்.
அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி அகிலா தர்மதாது நெறிப்படுத்தலின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஹன்சிகா குமாரசிறியிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

