இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தலா 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

“இந்த அழிவுகரமான அனர்த்தங்களால் ஏற்பட்ட துயரங்களைக் கண்டு நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன் என்று கூறிய கண்டா, உயிர்களைக் காப்பாற்றவும், சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவிகளை வழங்கும் என இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த மோசமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்க நாங்கள் குறித்த அரசாங்கங்களுடன் இணைந்து விரைவாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மானியங்கள் அவசரகால மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும். 

எஸ். ரஜீவன்

Related Posts