இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்
உயர் நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள நீண்ட கால தாமதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்காக, அரசியலமைப்பைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பிலும், கடந்த மே மாதம் 25ஆம் திகதி அந்தச் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
அதன்படி, அந்தக் கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும், தங்களது சங்கத்தினால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்துமாறும் புதிய கடிதத்தின் மூலம் அவர்கள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கும், நீதியை நிலைநாட்டுவது குறித்த பொதுமக்களின் நம்பிக்கைக்கும் ஏற்படுத்தக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களில் முதலாவது வெற்றிடம், கடந்த 2025 ஜூன் 20ஆம் திகதி நீதியரசர் காமிணீ அமரசேகர ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். துரைராஜா, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களின் ஓய்வு காரணமாக உயர் நீதிமன்றத்தில் தற்போது நான்கு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் நான்கு வெற்றிடங்கள் காணப்படுவதுடன், அவையும் இதுவரை நிரப்பப்படவில்லை.
உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிப்பதற்காக, அரசியலமைப்பின் 107(1) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ரீதியான பொறுப்பினைத் தாங்கள் நிச்சயமாக மதிப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த வெற்றிடங்கள் நீண்ட காலமாக நீடிப்பது, அந்த முக்கியமான அரசியலமைப்பு கடமையை திறம்பட நிறைவேற்றுவதற்கு முரணானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

